வாகை சூடவா
நடிப்பு: விமல், இனியா, பாக்யராஜ், பொன்வண்ணன், தம்பி ராமய்யா.
இயக்கம்: ஏ.சற்குணம்
தயாரிப்பு: வில்லேஜ் தியேட்டர்ஸ்
இசை: டி.ஜிப்ரான்
ஒளிப்பதிவு: ஓம் பிரகாஷ்
செங்கல் சூளையில் வேகும் குழந்தைகளின் வாழ்வில், கல்வியை விதைக்கும் ஆசிரியனின் கதை. அரசாங்க வேலை பார்க்காததால் சொந்தங்களால் புறக்கணிக்கப்பட்ட பாக்யராஜுக்கு, மகன் விமலை அரசாங்க வாத்தியாராக்கி விட வேண்டும் என்பது கனவு. கிராம சேவா அமைப்பு மூலம், செங்கல் சூளைகளில் வேலை செய்யும் மக்கள் வசிக்கும் கிராமத்துக்கு வேலைக்கு அனுப்புகிறார் விமலை. வாத்தியாரை கேலிப் பொருளாக பார்க்கும் குழந்தைகள், விவரம்கெட்ட ஆளாக பார்க்கும் மக்கள், ஏமாளியாக பார்க்கும் டீக் கடைக்காரி, வில்லனாக பார்க்கும் முதலாளி... இத்தனை பேரையும் சமாளித்து விமல், வாகை சூடினாரா என்பது கதை.
பச்சை என்பதே கண்ணில் படாத வெட்டவெளி பாலைவன கிராமம். நீண்டு கிடக்கும் செங்கல் சூளைகள். பிஞ்சு விரல்கள் முதல் முதிர்த்த கைகள் வரை மண்ணோடு கொண்டிருக்கும் உறவு. ஒரே ஒரு டீக்கடை. மண்ணையும், செங்கலையும் மருந்தாக, விளையாட்டு பொருளாக, தெய்வமாக பார்க்கும் மக்கள் என வலி நிறைந்த வாழ்க்கையை காட்டியிருக்கிறார் இயக்குனர் சற்குணம்.
பென்சில் கொண்டு வரைந்த மாதிரியான மீசை, ஜெமினி கணேசன் ஹேர் ஸ்டைல், தொள தெளா உடை என 60களின் இளைஞனை கண்முன் நடமாட விட்டிருக்கிறார் விமல். இனியா விரும்பும் பாட்டை கேட்க, ரேடியோவை கொடுத்துவிட்டு ‘அவசரப்பட்டு விட்டோடமோ’ என்று நினைப்பதும், வேண்டாமென்று மறுத்த சாப்பாட்டை திருட்டுத்தனமாக சாப்பிடுவதும், தம்பி ராமய்யா போடும் கணக்குக்கு அப்பாவிடம் பதில் கேட்டு சொல்வதும், தெனாவெட்டு போஸ்ட்உமனிடம் கிண்டலடிப்பதுமாக, விமல் வித்தியாசம் காட்டி நிற்கிறார். ‘என் வாத்தியார் வேலைக்கு வேற ஆள் கிடைப்பாங்க. ஆனா உழைப்பு, சோறுன்னு இருந்தவங்க மனசுல கல்வியை விதைச்சுட்டேம்பா. என்னை விட்டா அவங்களுக்கு யாருப்பா இருக்காங்க’ என்று பாக்யராஜிடம் கலங்கி நிற்கும்போது, நம்மையும் கலங்க வைக்கிறார்.
நடிப்பில் ஆச்சர்யப்படுத்துகிறார் இனியா. விமல் மனதில் காதல் இருக்கிறதா என்பதை அறிய தனக்கு கல்யாணம் நடக்கப்போவதாக பொய் சொல்வதும் அதைக் கேட்டு விமல் வருந்தும்போது சந்தோஷ ஆட்டம் போடுவதும், ‘நீ கல்யாணமாயி போயிட்டா, எனக்கு யார் சமைச்சுப் போடுவா?’ என்று விமல் கேட்க, ஏமாற்றம், விரக்தி, வேதனையால் கண்ணீர் ததும்ப வீடு திரும்பும் காட்சி அபாரம்.
சதா கணக்கு போட்டு டார்ச்சர் பண்ணும், ‘டூ போர் எட்டு’ தம்பி ராமய்யா, செங்கல் மண்ணை கண்டுபிடித்து, காடு அழிந்ததை தாங்காமல் மனநோயாளியாகி, ‘விதைக்கல அறுக்கற...’, ‘நான் போறேன் நீ இரு’ என்று விமலை அறிவுறுத்தும் குமரவேல், புழுதிக்காட்டிலேயே கண்டுடெடுக்கப்பட்டிருக்கிற நீலகண்டன் உள்ளிட்ட சிறுவர்கள், முதலாளி பொன்வண்ணன் தங்களை ஏமாற்றுவதை உணர்ந்து, மகளை விமலிடம் ஒப்படைத்து, ‘யய்யா இவளுக்கு எதையாவது சொல்லிக் கொடுய்யா’ என்று கலங்கும் பெண் என ஒவ்வொரு பாத்திரப்படைப்பும் அற்புதம். அந்த காலகட்டத்தை திரையில் கொண்டு வர நிறையவே மெனக்கெட்டிருக்கிறார்கள். ஜிப்ரானின் இசையும், ஓம்பிரகாஷின் ஓளிப்பதிவும் படத்துக்கு பலம்.
எந்த திருப்பமும் இன்றி முதல்பாதி முழுக்க காட்சிகளின் அடர்த்தியால் படம் நகர்வது நெளிய வைக்கிறது. படித்த வாத்தியார் என்பதை தவிர இனியாவுக்கு விமல் மீது காதல் பிறக்க வேறு காரணம் இல்லை என்பதால் காதலில் அழுத்தம் குறைவு. கிளைமாக்சில் பாக்யராஜின் என்ட்ரியில் தொடங்கி அடுத்தடுத்து நடக்கும் விஷயங்களில் நாடக வாசனை. விமல் எடுக்கப் போகும் முடிவை முன்பே யூகிக்க முடிவதால் ஆச்சர்யத்தையோ, நெகிழ்ச்சியையோ ஏற்படுத்தவில்லை.
No comments:
Post a Comment